உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டி; 3 வெண்கல பதக்கங்களை உறுதி செய்த இந்திய வீரர்கள்


உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டி; 3 வெண்கல பதக்கங்களை உறுதி செய்த இந்திய வீரர்கள்
x

உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 3 வெண்கல பதக்கங்களை உறுதி செய்து இந்திய வீரர்கள் வரலாறு படைத்து உள்ளனர்.

தாஷ்கன்ட்,

உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கன்ட் நகரில் உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஆடவர் குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர்களான தீபக் போரியா (51 கிலோ), ஹுசாமுதீன் (57 கிலோ) மற்றும் நிஷாந்த் தேவ் (71 கிலோ) ஆகியோர் இன்று வரலாறு படைத்தனர்.

உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக இந்திய குத்து சண்டை வீரர்கள் 3 பதக்கங்களை உறுதி செய்து உள்ளனர். இதற்கு முன்பு, கடந்த 2019-ம் ஆண்டில் மணீஷ் கவுசிக் மற்றும் அமித் பங்கால் ஆகிய இருவரும் இந்தியாவுக்காக பதக்கங்களை வென்றதே சாதனையாக இருந்து வந்தது.

இதில், இன்று நடந்த போட்டி ஒன்றில், கிரிகிஸ்தானின் தியூஷிபேவ் நூர்ஜிகித் என்பவரை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தீபக் அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.

இந்தியாவின் ஹுசாமுதீன், பல்கேரியாவின் டையஸ் இபானேஜ் என்பவரை 4-3 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார். இதனால், இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் உறுதியானது.

இந்திய வீரர் நிஷாந்த் தேவ், கியூபாவின் ஜார்ஜ் கியூவெல்லாரை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறி நாட்டுக்கான மற்றொரு பதக்கத்திற்கு வழிவகுத்து உள்ளார்.

அவர்கள் அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், இன்று ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 வெண்கல பதக்கங்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.


Next Story