உலகக்கோப்பை செஸ் அரையிறுதி; பிரக்ஞானந்தா-பேபியானோ மோதிய ஆட்டம் டிரா- இன்று டைபிரேக்கர்


உலகக்கோப்பை செஸ் அரையிறுதி; பிரக்ஞானந்தா-பேபியானோ மோதிய ஆட்டம் டிரா- இன்று டைபிரேக்கர்
x

image courtesy; twitter/@FIDE_chess

உலகக்கோப்பை செஸ் அரையிறுதி போட்டியில் பிரக்ஞானந்தா-பேபியானோ மோதிய ஆட்டம் டிரா ஆனது.

பெக்கு,

உலகக்கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 30ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 206 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார்.

நேற்று முன்தினம் நடந்த முதல் ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 78-வது காய் நகர்த்தலில் டிரா செய்தார். அரையிறுதி சுற்றின் 2-வது ஆட்டம் நேற்று நடந்தது. இதில் வெள்ளை நிற காய்களுடன் பிரக்ஞானந்தா ஆடினார். 47-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இந்த ஆட்டமும் 'டிரா' ஆனது. இரு ஆட்டங்களும் 'டிரா' ஆனதால் வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் நடத்தப்படுகிறது. டைபிரேக்கர் ஆட்டம் இன்று நடக்கிறது.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சென் 1.5-0.5 என்ற கணக்கில் நிஜாத் அபா சோவை (அஜர்பைஜான்) வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.


Next Story