

மும்பை,
ஓட்டலில் யார் முதலில் உணவு பார்சலை வாங்குவது என ஏற்பட்ட மோதலில் வாலிபரை அடித்து கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாலிபர் மீது தாக்குதல்
மும்பை செம்பூர் பகுதியில் உள்ள ஓட்டல்-பாரில் உணவு வாங்க நேற்று முன்தினம் இரவு அனில் ரந்வே (வயது22) என்ற வாலிபர் சென்றார். அங்கு அவருக்கும், மற்ற 2 பேருக்கும் இடையே யார் முதலில் உணவு வாங்குவது என்ற விவகாரத்தில் மோதல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் 2 பேரும் வாலிபரை சரமாரியாக தாக்கினர். 2 பேரும் சேர்ந்து வாலிபர் தலையில் இரும்பு கம்பியால் தாக்கியதாக தெரிகிறது. இதில் அவர் காயமடைந்தார். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரும் தப்பியோடினர்.
2 பேர் கைது
தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் வாலிபரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வாலிபரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். சம்பவம் குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். மேலும் வாலிபரை அடித்து கொலை செய்த 2 பேரை தேடி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.