

பாலக்காடு,
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மண்ணார்காடு பகுதியை சேர்ந்தவர் அவினாஷ். இவருடைய மனைவி கோவையை சேர்ந்த தீபிகா (வயது 28). இவர்களுக்கு 1½ வயதில் ஐவின் என்ற ஆண் குழந்தை உள்ளது. அவினாஷ், தீயணைப்பு துறையின் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வந்தார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று அவினாஷ் காலையில் எழுந்த பின்னர், தனது குழந்தையை முத்தமிட சென்றதாக தெரிகிறது. இதை பார்த்த தீபிகா, பல் துலக்காமல் மகனை முத்தமிட வேண்டாம் என்று கூறினார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அவினாஷ் வீட்டில் இருந்த அரிவாளால் தீபிகாவை சரமாரியாக வெட்டினார்.
இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது, குழந்தை அழுது கொண்டிருந்ததையும், தீபிகா உயிருக்கு போராடி கொண்டிருந்ததையும் பார்த்து உள்ளனர். உடனே தீபிகாவை மீட்டு பெருந்தல்மன்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி அவர் இறந்தார்.
தகவல் அறிந்த மண்ணார்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது கையில் அரிவாளுடன் அவினாஷ் வீட்டில் இருந்தார். அவரிடம் விசாரணை நடத்தியதில், பல் துலக்காமல் குழந்தையை முத்தமிட வேண்டாம் என்று கூறியதால் மனைவியை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அவினாஷை போலீசார் கைது செய்தனர்.
தம்பதி பெங்களூருவில் வசித்து வந்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் மண்ணார்காடு பகுதிக்கு குடிபெயர்ந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவினாஷ் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.