

காரைக்கால்
காரைக்கால் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர், மாதா கோவில் வீதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். கடையின் வாசலில் விற்பனைக்காக வைத்திருந்த 21 மின்விசிறிகளின் இறக்கைகள் நேற்று காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரகாஷ், கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, 50 வயது மதிக்கத்தக்க ஒருவர், கடையின் பக்கவாட்டில் நின்றவாறு சாக்குப்பையில் மின்விசிறி இறக்கைகளை திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து கண்காணிப்பு கேமரா காட்சி ஆதாரத்துடன் காரைக்கால் நகர போலீசில் புகார் அளித்தார்.
இதற்கிடையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான நபர் மதகடி அருகே சென்றதை பார்த்த கடை ஊழியர்கள், அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், திருவாரூர் அய்யனார் கோவில் வீதியை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 50) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.