காளான் வளர்ச்சியில் ஒரு புரட்சி

காளான் வளர்ப்பில் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறார், அனிதா தேவி. இவர் பீகார் மாநிலத்தில் நாலந்தா மாவட்டத்தில் உள்ள அனப்பூர் கிராமத்தை சேர்ந்தவர்.
காளான் வளர்ச்சியில் ஒரு புரட்சி
Published on

பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் இந்த கிராமத்தில் வசிப்பவர்களின் ஏழ்மையை விரட்டியடிக்க இவருடைய காளான் வளர்ப்புத் தொழில் கைகொடுத்திருக்கிறது. அந்த அளவிற்கு காளான் வளர்ப்பை லாபகரமான தொழிலாக மாற்றியிருக்கிறார், அனிதா தேவி.

இவருடைய கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் அனிதா தேவியின் வழிகாட்டுதலுடன் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் வரை காளான் வளர்ப்பில் வருமானமும் ஈட்டுகிறார்கள். இந்த கிராமத்தை பீகார் மாநில வேளாண் துறை காளான் வளர்ப்பு கிராமமாக அறிவித்திருக்கிறது. இப்போது சுற்றுப்புற பகுதியில் இருக்கும் 10 கிராமத்தை சேர்ந்தவர்களும் அனிதா தேவியுடன் கைகோர்த்து காளான் வளர்ப்பை முதன்மை தொழிலாக மாற்றி இருக்கிறார்கள்.

அனிதா தேவி, ஹோம் சயின்ஸ் படித்தவர். தன்னுடைய படிப்பின் மூலம் வீட்டில் இருந்தே சுயதொழில் தொடங்குவதற்கு ஆர்வம் காட்டியவர், காளான் வளர்ப்பை கையில் எடுத்திருக்கிறார். 2010-ம் ஆண்டு இவர் காளான்கள் வளர்க்க ஆரம்பித்தபோது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வினோதமாக பார்த்திருக்கிறார்கள். அவர் எதிர்பார்த்தவாறு காளான்களின் வளர்ச்சியும், வருமானமும் அமையவில்லை. பீகார், உத்தரகாண்ட் மாநிலங்களில் உள்ள வேளாண் பல்கலைக்கழகங்களுக்கு சென்று காளான் வளர்ப்பு பற்றி முறையாக பயிற்சி பெற்றிருக்கிறார். அவர்களின் ஆலோசனையின்படி தேர்வு செய்த வீரியமிக்க விதைகள் காளான் வளர்ப்புக்கு கைகொடுத்திருக்கிறது.

காளான் வளர்ப்பு மூலம் நான் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்தவர்களும் பயன் அடைந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. மற்றவர்களுக்கு நான் ரோல் மாடலாக விளங்குவது பெருமையாகவும் இருக்கிறது. முதலில் நான் காளான் வளர்ப்பு குறித்து இங்குள்ளவர்களிடம் சொன்னபோது, காது கொடுத்து கேட்கும் மனநிலையில் யாரும் இல்லை. நான் லாபம் சம்பாதிக்க தொடங்கியதும் அவர்களும் ஆர்வம் காட்ட தொடங்கிவிட்டார்கள். சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள்தான் என்னுடைய முதல் இலக்கு. அவர்கள் மூலம் மற்றவர்களுடன் எளிதாக தொடர்பு கொண்டுவிடலாம் என்ற நோக்கத்தில் நாலந்தா மாவட்டத்திலுள்ள சுய உதவிக்குழு பெண்களை சந்தித்து வருகிறேன். அடுத்த ஆண்டுக்குள் 500 குழுக்களை காளான் வளர்ப்பில் ஈடுபடுத்திவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்கிறார்.

அனிதா தேவி, அனைத்து தரப்பு பெண்களும் எளிதாக காளான் வளர்ப்பில் ஈடுபடுவதற்கு வசதியாக ஓஸ்டர், மில்கி ஒயிட் ஆகிய இரண்டு விதமான காளான்களை வளர்த்து வருகிறார்.

ஓஸ்டர் காளான்களை வளர்க்க அதிகம் செலவு செய்ய வேண்டியதில்லை. விவசாய கழிவுகளிலேயே அவைகளை வளர்த்துவிடலாம். செப்டம்பர் முதல் மார்ச் வரையிலான காலகட்டம் காளான் வளர்ப்புக்கு உகந்தவை. நாலந்தா பகுதியின் தட்பவெப்ப நிலைக்கு ஓஸ்டர், மில்கி ஒயிட் காளான் வளர்ப்பு முறையே சிறந்தவை. அவைகளை வீட்டுக்குள்ளேயே வளர்க்கலாம். பராமரிப்புக்கும் மெனக்கெடவேண்டியதில்லை. நல்ல விதைகளை தேர்ந்தெடுப்பதில் மட்டுமே அதிக கவனம் செலுத்த வேண்டும். அதற்காகவே நான் காளான் வளர்ப்பில் மட்டும் ஈடுபடாமல் விதைகளையும் உருவாக்குகிறேன். தினமும் 20 கிலோ வரை விதைகளை வாங்கி செல்கிறார்கள். தற்போது விதைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த அளவிற்கு காளான் வளர்ப்பில் பெண்கள் ஆர்வம் காட்டுவதை பார்க்கும்போது மனநிறைவாக இருக்கிறது என்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com