தாம்பரம் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் கிடந்த 3 மாத ஆண் குழந்தை

தாம்பரம் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் கிடந்த 3 மாத ஆண் குழந்தையை ரெயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டு செங்கல்பட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
தாம்பரம் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் கிடந்த 3 மாத ஆண் குழந்தை
Published on

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் ரெயில் நிலையத்தில் 3-வது நடைமேடையில் நேற்று மதியம் சென்னை கடற்கரையில் இருந்து மின்சார ரெயில் வந்து நின்றது. அதில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றுவிட்டனர்.

அப்போது அந்த நடை மேடையில் நடந்து வந்த கல்லூரி மாணவர்கள் சிலர், மின்சார ரெயிலின் முதல் வகுப்பு பெட்டியில் குழந்தை அழும் சத்தம்கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள், ரெயில் பெட்டியில் ஏறி பார்த்தனர்.

அதில் அங்கு, பிறந்து 3 மாதங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று, துணியால் சுற்றி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. இதுபற்றி தாம்பரம் ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக அங்கு விரைந்து வந்த தாம்பரம் ரெயில்வே பாதுகாப்பு படையினர், ரெயிலில் கேட்பாரற்று கிடந்த குழந்தையை மீட்டு செங்கல்பட்டு குழந்தைகள் காப்பக ஊழியர்களிடம் ஒப்படைத்தனர்.

மேலும் பச்சிளம் குழந்தையை ரெயிலில் போட்டுச்சென்றது யார்?, குழந்தையை வளர்க்க முடியாமல் விட்டு சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் தாம்பரம் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com