

பெங்களூரு:
பெங்களூரு ஜரகனஹள்ளியை சேர்ந்தவர் பவன்குமா (வயது 34). இவருக்கு முகநூல் மூலமாக வெளிநாட்டை சேர்ந்த மதினா என்ற இளம்பெண்ணின் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் முகநூல் மூலமாக செல்போன் எண்ணை பரிமாறி பேசி வந்தனர். இதனால் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இதற்கிடையில், பவன்குமாரை பார்க்க வெளிநாட்டில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்திருப்பதாகவும், தன்னிடம் வெளிநாட்டு பணம் மட்டுமே இருப்பதால், விமான நிலைய அதிகாரியின் வங்கி கணக்குக்கு ரூ.1 லட்சம் அனுப்பும்படி மதினா கூறினார். இதனை நம்பிய அவரும் பணம் அனுப்பினார்.
அதன்பிறகு, மதினா தனது செல்போன் சுவிட்ச் ஆப் செய்து விட்டதால், பவன்குமாரால் தொடர்பு கொள்ள முடியாமல் போனது. அப்போது தான் காதல் நாடகமாடி தன்னிடம் ரூ.1 லட்சத்தை வாங்கி மதினா மோசடி செய்திருப்பதை பவன்குமார் உணர்ந்தார். இதுபற்றி அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.