

ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாணவர்கள் விடுதியில் மாணவர்களுடன் சேர்ந்து சப்-கலெக்டர் உணவருந்தினார்.
முதல்-அமைச்சர் உத்தரவு
தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ-மாணவிகள் விடுதிகளில் ஆய்வு நடத்தி மாணவர்களுக்கு தேவையான வசதிகளை கேட்டறிந்து வழங்க வேண்டும் எனவும், உணவின் தரம் அறிய வேண்டும் எனவும் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் கலெக்டர் மேகநாத ரெட்டி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவ-மாணவிகள் தங்கிப் பயிலும் விடுதியினை ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மாணவர்களுடன் உணவருந்தினார்
அந்த உத்தரவின் அடிப்படையில் சிவகாசி சப்-கலெக்டர் பிருதிவிராஜ் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார் நத்தம் பகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் ஆய்வு நடத்தினார்.
அப்போது அவர், மாணவர்களுடன் தரையில் அமர்ந்து மதிய உணவினை சாப்பிட்டார். பின்னர் அவர் மாணவர்களுக்கு ஏதேனும் குறைகள் உள்ளதா என கேட்டறிந்தார். அத்துடன் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கும் படி விடுதி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.