

ஆர்.பி.சவுத்ரியின் மகன் ஜித்தன் ரமேஷ் வில்லன் ஆனார் ஜித்தன், மதுரை வீரன், புலி வருது, நீ வேணும்டா செல்லம் உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்தவர், ஜித்தன் ரமேஷ். பிரபல பட அதிபர் ஆர்.பி.சவுத்ரியின் மகன். சில வருட இடைவெளிக்குப்பின் இவர், மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கிறார். அதுவும் வில்லனாக...
அவர் வில்லனாக நடிக்கும் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. கதாநாயகனாக சாய் நடிக்கிறார். கதாநாயகியாக வங்காளத்தை சேர்ந்த ஈனா என்ற புதுமுகம் நடிக்கிறார். ரவி, ஒளிப்பதிவு செய்தார். ஆனந்த் இசையமைத்தார்.
கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த நீங்கள், வில்லனாக நடிப்பது ஏன்? என்று ஜித்தன் ரமேசிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
படம் திரைக்கு வந்த பிறகு இந்த கேள்வி வராது. சில காலமாக நடிக்காமல் ஒதுங்கியிருந்தேன். என்றாலும் சினிமாவை விட்டு ஒதுங்கவில்லை. பட தயாரிப்பில் கவனம் செலுத்தினேன். டைரக்டர் இந்த கதையை சொன்னபோது, இதை விடக்கூடாது என்று முடிவு செய்தேன்.
சிகப்பு ரோஜாக்கள் படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனா அல்லது வில்லனா? என்பதை எப்படி முடிவு செய்ய முடியாதோ, அதுபோல்தான் இந்த படமும்... படப்பிடிப்பு சென்னை பார்க் ஓட்டலில் தொடங்கியது. ஒரு பாடல் காட்சி அங்கே படமாக்கப்பட்டது. ஜித்தன் ரமேசுடன் ஏராளமான அழகிகள் ஆடிப்பாடுவது போன்ற காட்சி அங்கு படமானது.
வம்சி கிருஷ்ணா மல்லா, இந்த படத்தை டைரக்டு செய்கிறார். ரவி சவுத்ரி, நாகார்ஜுனா ஆகிய இருவரும் கூட்டாக தயாரிக்கிறார்கள். அடுத்த கட்ட படப் பிடிப்பு கோவாவில் நடைபெற இருக்கிறது.