ஆதிசங்கரரின் கடைசி உபதேசம்

சத்சங்கத்தில் நிலைத்திருக்கவேண்டும் என்றும் பகவத் பக்தியை திடமாக்கிக் கொள்ளவேண்டும் என்றும் ஆதிசங்கரர் தன் சீடர்களிடம் கூறினார்.
ஆதிசங்கரரின் கடைசி உபதேசம்
Published on

ஆதிசங்கரர் கடைசியாக சீடர்களுக்கு செய்த உபதேசம் ஸோபான பஞ்சகம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ஸோபானம் என்றால் படிகளின் வரிசை என்று பொருள். பங்சகம் என்றால் ஐந்து என்று அர்த்தம். ஸோபான பஞ்சகம் என்பது ஐந்து சுலோகங்கள் கொண்ட சிறிய நூலாகும். இதனை உபதேச பஞ்சகம் அல்லது ஸாதனா பஞ்சகம் எனவும் கூறுவர். இதில் சங்கரர் மோட்ச சாம்ராஜ்யத்தை அடைய நாற்பது படிகளைக் கடக்க வேண்டும் என்று விளக்குகிறார்.

1. தினந்தோறும் தவறாமல் வேதம் ஓது. அதில் விதித்துள்ள கர்மாக்களை முறைப்படி செய். பூஜைகள் செய். இவ்வாறு நீ செய்யும் கர்மாக்களின் பலனை எதிர்நோக்காமல் இது பகவானுக்கு என அர்ப்பணம் செய்து விடு. வாழ்க்கை நெறி முறைகளை மீறி நடந்ததினால் குவிந்துள்ள உன் பாவ மூட்டையைச் சிறிது சிறிதாகக் கரைத்து விட்டு விடு, இதனால் சித்த சுத்தி ஏற்படும். இந்நிலையில் சம்சார தோஷங்களை துருவி அலசிப்பார்ப்பாயாகில் ஞான மார்க்கத்தில் அது கொண்டு விடும். இப்போது உனக்கு நித்யா நித்ய வஸ்துக்களின் அறிவு ஏற்படும். அநித்ய வஸ்துக்களில் வைராக்கியம் ஏற்படும்போது இடையில் தடை ஏற்படுமாகின். வீட்டை விட்டு (அடுத்த ஆசிரமத்தில் நுழைந்து விடு) வெளிச் சென்று விடு.

2. நீ ஸத்ஸங்கத்திலேயே நிலைத்திரு. பகவத் பக்தியை திடமாக்கிக் கொள். சமாதி சட்க ஸம்பத்திகளுடன் நீ மோட்ச வேட்கையோடு ஆத்ம விசாரம் செய். பின்னர் கர்மாக்கள் பிறவிச்சுழலில் தள்ளிவிடும் என உணர்ந்து கர்மாக்களை விட்டு விடு. பிறகு ஆத்ம ஞானி ஒருவரை அடைந்து, குற்றேவல் புரிந்து கேட்பாயாகில், அவர் கருணை கூர்ந்து ஆத்ம ஞானத்தை உபதேசிப்பார். உபநிஷத்துக்களில் கூறும் தத் த்வம் அஸி போன்ற மகா வாக்கியங்களின் உட்பொருளை உணர்ந்து கொள்வாயாக.

3. மகா வாக்யார்த்தங்களை விசாரணை செய். ச்ருதியை பிரமாணமாகக் கொள். வேதங்களுக்கு மாறாக வாதாடுவோரிடமிருந்து விலகி இரு. வேதங்களின் உட்பொருளை உணர தர்க்கம் என்ற புத்திக் கூர்மையை ஆயுதமாகக் கொண்டு அக்ஞானம் என்ற அசுரனை வெட்டிவிடு. நான் உடலல்ல பிரம்மமே என்பதை உணர்ந்து கொள். இவ்வறிவு பெற்ற பின் அகந்தையை அணுகவிடாதே. அறிவாளிகளிடம் வாதம் செய்யாதே.

4. பசி என்ற நோயைத் தீர்க்க மருந்தெனக் கருதி கிடைத்த உணவை மிதமாக உட்கொள், நாவிற்கு ருசியான உணவில் ஆசையைத் துறந்து பிச்சை எடு. சுகத்தையும் துக்கத்தையும் சமமாகக் கருதி செயல்படு. பொன் போன்ற நேரத்தை வெட்டிப் பேச்சில் ஈடுபடுத்தாதே. பதவியில் உள்ளவர்களையும் தனவான்களையும் புகழ்ந்து தன் காரியத்தைச் சாதித்துக் கொள்ள விரும்பாதே.

5. ஏகாந்தமான இடத்தில் ஆசனத்தில் அமர்ந்து பரப்பிரம்மத்தைப் பற்றியே சிந்தித்திரு. பிரம்மமும் பூர்ணம், இந்த ஜகத்தும் பூரணம், பூர்ணமான பிரம்மத்திலிருந்து பூர்ணமான ஜகத் வந்தபின் எஞ்சியிருப்பதும் பூர்ணம் என அறிந்து பூர்ணாத்மாவினை தரிசனம் செய். நீ செய்த கர்மாக்களின் பலனை ஞானத்தால் எரித்து விடு. பலன் தரத் தொடங்கிவிட்ட கர்மாக்களின் பலனைப் புறத்தே தீர்த்துவிடு. பிரம்மத்திலேயே நிலைத்திருப்பதில் தயக்கம் காட்டாதே. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com