கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கூடங்கள் திறப்பு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கூடங்கள் திறப்பு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன

நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களும் கோடை விடுமுறைக்கு பிறகு திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.
Published on

நெல்லை,

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடந்தது. இந்த தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று தமிழகம் முழுவதும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.

நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களும் கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டன. பாளையங்கோட்டையில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை அழைத்து வந்தனர். இதனால் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பள்ளிக்கூட விடுதிகளில் தங்கி படிக்கக்கூடிய மாணவ-மாணவிகள் வெளியூர்களில் இருந்து பெட்டி, படுக்கைகளுடன் பள்ளிக்கூடங்களுக்கு வந்தனர். இதனால் பஸ்களிலும் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

2 மாத விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கூடத்துக்கு வந்த மாணவ-மாணவிகள் உற்சாகமாக காணப்பட்டனர். அவர்கள் தங்களுடன் பயிலும் மாணவ-மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். காலையில் பள்ளிக்கூடங்களில் பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து பல பள்ளிக்கூடங்களில் நல்லொழுக்க வகுப்புகள் நடந்தன. நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் நேற்று மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

அரசு மற்றும் அரசு உதவிபெறுகின்ற உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதனால் பள்ளிக்கூடங்களில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்களும் வந்து இருந்தனர். இதனால் பள்ளிக்கூடங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com