சொத்துகளை எழுதி வாங்கிவிட்டு பெற்றோரை துரத்திய மகள்

சொத்துக்களை எழுதி வாங்கி கொண்டு மகள் வீட்டை விட்டு துரத்தியதாக கலெக்டரிடம் பெற்றோர் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.
சொத்துகளை எழுதி வாங்கிவிட்டு பெற்றோரை துரத்திய மகள்
Published on

கோட்டுச்சேரி

சொத்துக்களை எழுதி வாங்கி கொண்டு மகள் வீட்டை விட்டு துரத்தியதாக கலெக்டரிடம் பெற்றோர் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.

வயதான தம்பதி

காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரியை அடுத்த கீழகாசாக்குடியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 95). இவரது மனைவி சங்கரி (80). இவர்களுக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.

ராமசாமி தனது விவசாய நிலம் மற்றும் சொத்துகளை மகன், மகளுக்கு பல ஆண்டுகளுக்கு முன் பிரித்து எழுதி கொடுத்துவிட்டார். தங்களின் கடைசி கால தேவைக்காக புதுச்சேரியில் உள்ள ரூ.30 லட்சம் மதிப்பிலான நிலத்தை மட்டும் ராமசாமி தனது பெயரில் வைத்திருந்தார்.

வீட்டைவிட்டு வெளியேற்றினார்

கடந்த ஆண்டு உடல் நலக்குறைவு ஏற்படவே புதுச்சேரியில் உள்ள தனது 2-வது மகள் பானுமதி (60) வீட்டில் இருந்து ராமசாமி சிகிச்சை பெற்றார். அப்போது தங்களை கடைசி காலம் வரை நன்றாக பார்த்துக்கொள்கிறேன் என ஆசைவார்த்தை கூறிய பானுமதி, தந்தையிடம் இருந்த நிலத்தை தனது பேரில் எழுதி வாங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதன்பின் ராமசாமியையும், தாய் சங்கரியையும் வீட்டை விட்டு பானுமதி வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதனால் தவித்த மூத்த தம்பதியினர் காரைக்காலில் உள்ள மகன்கள் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

கலெக்டரிடம் மனு

இந்த நிலையில் தங்களை ஏமாற்றி எழுதி வாங்கிய நிலத்தை திரும்ப வழங்க வேண்டும் அல்லது அதற்கான பணம் கொடுக்க வேண்டும் என பானுமதியிடம் ராமசாமி கேட்டார். ஆனால் அவர் தர மறுத்துவிட்டார்.

இந்தநிலையில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனை ராமசாமி, சங்கரி தம்பதியினர் இன்று சந்தித்து, தனது மகள் தங்களிடம் ஏமாற்றி எழுதி வாங்கிய நிலத்தை மீட்டு தரவேண்டும் என்று கண்ணீர் மல்க மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com