ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

தஞ்சை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை ஒன்றிய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் தஞ்சை பனகல் கட்டிட வளாகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேற்று மதியம் வந்தனர். 12 மணிக்கு வந்த அவர்கள் திடீரென ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் அபிமன்னன் தலைமையில் இந்த போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் அட்டை பெற்ற அனைவருக்கும் பாகுபாடு இன்றி வேலை வழங்க வேண்டும். அறிவிக்கப்பட்ட சட்டப்படியான கூலி அனைவருக்கும் வழங்க வேண்டும். வியாழக்கிழமை வேலைக்கு வந்தால் தான் வாரம் முழுவதும் வேலை வழங்கப்படும் என கடைபிடிக்கும் முறையை கைவிட வேண்டும். சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

இதில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் மாலதி, நகர செயலாளர் செந்தில்குமார், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் அன்பு, பேர்நீதிஆழ்வார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் ஊராட்சி ஒன்றிய ஆணையர் துரை பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு கலைந்து சென்றனர். 2 மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com