அனைத்து கடைகளும் மூடல்: முழு ஊரடங்கால் வேலூர் மாநகரம் வெறிச்சோடியது தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களுக்கு அபராதம்

முழு ஊரடங்கு காரணமாக வேலூர் மாநகராட்சியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. வாகனங்கள் இயங்காததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தேவையின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து அபராதம் விதித்தனர்.
அனைத்து கடைகளும் மூடல்: முழு ஊரடங்கால் வேலூர் மாநகரம் வெறிச்சோடியது தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களுக்கு அபராதம்
Published on

வேலூர்,

தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கவும், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் இந்த மாத (ஜூலை) ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

அதன்படி ஜூலை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழுஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. வேலூர் மாநகராட்சியில் மருந்து கடைகள், பெட்ரோல் பங்குகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. மளிகை, காய்கறி, மளிகை, மீன், இறைச்சி உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.

சாலைகள் வெறிச்சோடின

டீக்கடைகள், பேக்கரிகள், ஓட்டல்கள் திறக்கப்படவில்லை. அதனால் ஓட்டல்களில் மட்டும் சாப்பிட்டு வந்தவர்கள் நேற்று சிரமத்துக்கு உள்ளானார்கள். மாநகராட்சியின் சில பகுதிகளில் தடையை மீறி தள்ளுவண்டிகளில் வைத்து உணவுகள் விற்பனை செய்யப்பட்டன. அங்கு பொதுமக்களின் கூட்டம் காணப்பட்டது. போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் ஆட்டோ, கார், லாரி உள்ளிட்ட வாகனங்களின் இயக்கம் இல்லாமல் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில சாலைகள் வெறிச்சோடின.

வேலூர்-ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான பிள்ளையார்குப்பம் சோதனைச்சாவடி வழியாக வந்த அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் உள்ளதா என்று போலீசார் சோதனை செய்து அனுமதித்தனர். இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

வேலூர் மாநகரின் முக்கிய சாலைகளான அண்ணாசாலை, ஆரணிசாலை, ஆற்காடு சாலை, காட்பாடி சாலை, கிரீன்சர்க்கிள், கலெக்டர் அலுவலக மேம்பாலம் பகுதி, மக்கான் சந்திப்பு, நேஷனல் சந்திப்பு, காமராஜர் சிலை சந்திப்பு, திருமலை-திருப்பதி தேவஸ்தான சந்திப்பு, சித்தூர் பஸ்நிலைய சந்திப்பு, மண்டித்தெரு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

அபராதம் விதிப்பு

மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள தெருக்கள் மற்றும் சாலையோரம் காலை மற்றும் மாலை வேளையில் பொதுமக்களின் கூட்டம் வழக்கம்போல் காணப்பட்டது. சாலையோர கடைகளில் நின்று கதை பேசிக் கொண்டிருந்தவர்களை ரோந்து சென்ற போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் வீட்டிற்கு செல்லும்படி எச்சரித்து அனுப்பினர்.

முழுஊரடங்கை அமல்படுத்தும் வகையில் போக்குவரத்து போலீசார் கலெக்டர் அலுவலக மேம்பாலம் அருகே, கிரீன் சர்க்கிள், திருமலை-திருப்பதி தேவஸ்தானம், தொரப்பாடி எம்.ஜி.ஆர். சிலை அருகே உள்பட பல்வேறு இடங்களில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தேவையின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்குப்பதிந்து அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் முழு ஊரடங்கை மீறி இயங்கிய மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com