

தளி,
மேற்குதொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து உபரிநீர் அமராவதி ஆற்றில் நேற்றுமுன்தினம் 2-வது முறையாக திறந்து விடப்பட்டது.இதையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. இந்த அணைக்கு ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகின்றது. அதை அடிப்படையாகக்கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆற்றிலும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அத்துடன் சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் முதல் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் அங்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் அமராவதி அணையின் முக்கிய நீராதாரங்களான பாம்பாறு, தேனாறு, சின்னாறு மற்றும் ஓடைகளில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வண்ணம் உள்ளது. அதன்படி கடந்த மாதம் 15-ந்தேதி காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதையொட்டி அணை நிரம்பும் சூழல் நிலவியது.
அதைத்தொடர்ந்து அமராவதி ஆற்றின் கரையோரம் வசித்து வருகின்ற பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த மாதம் 16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரையிலும் அணையில் இருந்து 9 கண் மதகுகள் வழியாக உபரிநீர் அமராவதி ஆற்றில் திறந்து விடப்பட்டது. அதேபோன்று கடந்த 9-ந்தேதி மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்தது. இதையடுத்து 2-வது முறையாக உபரிநீர் அமராவதி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி வரையிலும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அணை நிரம்பும் சூழல் நிலவி வருவதால் அங்கு பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் நீர்மட்ட உயர்வை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த சூழலில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததையொட்டி நேற்று முன்தினம் இரவு முதல் 9 கண் மதகுகள் வழியாக உபரிநீர் அமராவதி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.இதையடுத்து தற்போதும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த மாதம் 16-ந்தேதி முதல் கடந்த 13-ந்தேதி வரையிலும் 2.49 டி.எம்.சி. உபரிநீர் அமராவதி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன் அங்கு கனமழை பெய்வதற்கான சூழல் நிலவுகிறது. இதனால் அணையின் நீர்வரத்து மற்றும் வெளியேற்றத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரவு-பகலாக கண்காணித்து வருகிறார்கள்.
மேலும் அணைப்பகுதியில் அசாதாரண சூழல் நிலவி வருவதை அடுத்து உடுமலை ஆர்.டி.ஓ.அசோகன் மற்றும் தாசில்தார் தங்கவேல் உள்ளிட்ட வருவாய் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்து மற்றும் உபரிநீர் வெளியேற்றம் குறித்த தகவல்களையும் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பொதுப்பணித்துறையினரிடம் அதிகாரிகள் கேட்டறிந்தனர்.
நேற்றைய மாலை 4 மணி நிலவரப்படி அணையின் மொத்த நீர்மட்டம் 88 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் அணைக்கு வந்துகொண்டுள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு அமராவதி ஆற்றில் 8 ஆயிரம் கனஅடியும் பிரதான கால்வாயில் 440 கன அடியும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பாசனத்திற்காக ராமகுளம் மற்றும் கல்லாபுரம் கால்வாய்களில் தலா 25 கனஅடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது.