மதவாதம், பிரிவினைவாதத்துக்கு மக்கள் இடம் கொடுக்கமாட்டார்கள்; நாராயணசாமி நம்பிக்கை

புதுச்சேரி மக்கள் மதவாதம், பிரிவினை வாதத்துக்கு இடம் கொடுக்கமாட்டார்கள் என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
மதவாதம், பிரிவினைவாதத்துக்கு மக்கள் இடம் கொடுக்கமாட்டார்கள்; நாராயணசாமி நம்பிக்கை
Published on

புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் கடந்த 2016 முதல் அரசு பணியிடங்களை நிரப்பவில்லை என்று என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பேசி வருகிறார். எங்கள் ஆட்சியில் மருத்துவம், பொதுப்பணித்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளில் பணிநியமனம் செய்துள்ளோம். மின்துறையில் பணிநியமனத்துக்கு நடவடிக்கை எடுத்தோம்.

அரசுத்துறைகளில் பல பதவிகளை நிரப்பியதற்கு ஆதாரம் உள்ளது. புதிய தொழிற்கொள்கை கொண்டுவந்தபின் சிறிய, நடுத்தர தொழிற்சாலைகள் வந்தன. 1.25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்தது. ரங்கசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது 10 ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்ததாக கூறியுள்ளார். அவர் தினக்கூலி ஊழியராக வேலை கொடுத்தார். அவர்களில் பலரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டதுதான் சரித்திரம்.

புதுவையில் மீண்டும் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சி வந்ததும் அரசு பணிக்கான வயது உச்சவரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு கொடுப்போம். அதன்மூலம் நிறைய பேருக்கு வேலை கிடைக்கும். காவல்துறை பணிகளை நிரப்ப முயற்சி எடுத்தபோது கவர்னர் தடுத்து நிறுத்தினார்.

அப்போது ரங்கசாமி வாய்மூடி இருந்தது ஏன்? இப்போது வேலைவாய்ப்புப்பற்றி பேசுகிறார். காவல்துறையில் பணியிடங்களை நிரப்ப நாங்கள் நடவடிக்கை எடுத்தது இளைஞர்களுக்கு தெரியும்.

புதுவையில் இப்போது கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. ஜனாதிபதி ஆட்சி வந்தபின் போதிய கட்டுப்பாடு இல்லாமல் அதிகரிக்கிறது. 2-வது அலை வீசுகிறது. இதனை கட்டுப்படுத்த சோதனைகளை அதிகப்படுத்தி தடுப்பூசிகளையும் அதிகமாக போடவேண்டும்.

மக்களும் முகக்கவசம் அணிய வேண்டும். முன்பு நாங்கள் களத்தில் இறங்கி கொரோனா பரவலை கட்டுப்படுத்தினோம். ஆனால் அந்த நிலை தற்போது இல்லை.

காங்கிரஸ் கட்சிக்கு களங்கம் கற்பிக்க பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. புதுவை மக்கள் மதவாதம், பிரிவினைவாதத்துக்கு இடம் கொடுக்கமாட்டார்கள். அமைதியை விரும்புபவர்கள் புதுவை மக்கள். பா.ஜ.க. வந்தால் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். எனவே அவர்களது ஆசை வார்த்தைகளை நம்பிவிடக்கூடாது. அவர்கள் அதிகாரபலம், பணபலத்தை கொண்டு மிரட்டுகிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது.

இந்த தேர்தலில் மக்கள் அவர்களுக்கு மரண அடி கொடுக்கவேண்டும். மண்ணாடிப்பட்டில் மிகப்பெரிய அராஜகம் நடக்கிறது. மக்கள் மத்தியில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக எழுச்சி உள்ளது. தமிழக, புதுச்சேரி மக்கள் பா.ஜ.க.வின் பின்னணி தெரிந்து வைத்துள்ளனர்.

ரங்கசாமியும் அவர்களோடு இணைந்து வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கிறார். இந்த தேர்தல் அமைதி விரும்பிகளுக்கும், மதவாத சக்திகளுக்கும் இடையேயான போராட்டமாகும்.

இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com