தொழில் துறைக்கு ஆக்ஸிஜன் விநியோகிக்கத் தடை: மத்திய அரசு நடவடிக்கை

கொரோனா தீவிர பாதிப்புக்கு ஆளாவோருக்கு ஆக்சிஜன் செலுத்துவது சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கிறது

Update: 2021-04-18 22:07 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காட்டுத்தீ போல பரவி வருகிறது. தீவிர பாதிப்புக்கு ஆளாவோருக்கு ஆக்சிஜன் செலுத்துவது சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் மருத்துவ ஆக்சிஜன் தேவை பெருகி வருகிறது.

ஆக்சிஜன் பற்றாக்குறையை தவிர்க்க, அதைப் பயன்படுத்துவதில் கவனமாக இருப்பதுடன், அதன் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் அழைப்பு விடுத்தார். இருப்பினும் இதற்கு மத்தியில் மராட்டிய மாநிலம், நாலசோப்ராவில் 2 தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 10 கொரோனா நோயாளிகள் கடந்த சில தினங்களுக்கு முன் பலியாகினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையின்போது தேவைப்படும் ஆக்சிஜனுக்கு பல மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தொழில்துறை பயன்பாட்டுக்காக ஆக்சிஜனை விநியோகிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. அந்தப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் ஆக்சிஜனை மருத்துவமனைகளில் உபயோகிக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்