இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

இங்கிலாந்து பிரதமா் போரிஸ் ஜான்சனுடன் காணொலி வாயிலாக நாளை (மே 4) பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

Update: 2021-05-03 02:54 GMT
புதுடெல்லி,

இங்கிலாந்து  பிரதமா் போரிஸ் ஜான்சனுடன் காணொலி வாயிலாக நாளை (மே 4)  பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.   இரு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்த இரு நாட்டு தலைவா்களின் ஆலோசனை உதவும் என அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: 

பிரதமா் மோடி மற்றும்  இங்கிலாந்து பிரதமரிடையே  மே 4 ஆம் தேதி நடைபெறும்  மெய்நிகர் மாநாட்டில், 'விரிவான செயல் திட்டம் 2030' என்ற 10 ஆண்டு ஒத்துழைப்புத் திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்த 5 துறைகளில் இந்தியா -  இங்கிலாந்து ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உதவும். 

வா்த்தகம் மற்றும் முன்னேற்றம், ராணுவம் மற்றும் பாதுகாப்பு, பருவநிலை மேம்பாட்டு நடவடிக்கை மற்றும் சுகாதரம் ஆகிய துறைகளில் இரு நாட்டு உறவை வலுப்படுத்த உதவும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து  பிரதமா் போரிஸ் ஜான்சன் கடந்த மாதம் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தாா். ஆனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில், அவா் தனது இந்திய பயணத்தை ரத்து செய்தது நினைவுகூரத்தக்கது. 

மேலும் செய்திகள்