மராத்தா பிரிவினருக்கு வழங்கிய இடஒதுக்கீடு ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

மராத்தா சமூகத்தினருக்கு மராட்டிய அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது.

Update: 2021-05-06 00:02 GMT

மராத்தா பிரிவினர்

மராட்டிய மாநிலத்தில் மராத்தா பிரிவினருக்கு, 16 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு சட்டம், 2018-ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.பின்னர் 1992-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின்படி எந்த ஒரு மாநிலத்திலும் இட ஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மேல் இருக்கக்கூடாது. இந்நிலையில் மராட்டியத்தில் மராத்தா சமூகத்தினருக்கு 50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிடப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று அசோக் புஷன் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், “கடந்த 1992-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை நாங்கள் மீண்டும் உறுதி செய்கிறோம். அதனை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பே இல்லை. அதன்படி மராத்தா பிரிவினருக்கு மராட்டிய அரசு வழங்கிய இட ஒதுக்கீட்டை ரத்து செய்கிறோம். அதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அதே போல அதற்கு எதிரான அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது” என்றனர்.

அரசியல் சாசனம்

மேலும் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட திருத்தத்தின்படி, சமூக பொருளாதார பின் தங்கிய பிரிவில் எந்த ஒரு சாதியையும் மாநில அரசுகள் இணைக்க முடியாது. மாநில அரசுகள் அடையாளம் கண்டு மத்திய அரசுக்கு பரிந்துரை மட்டுமே செய்ய முடியும் என்று நீதிபதிகள் கூறினர்.

தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. ஆனால் இந்த ஒதுக்கீடு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் கீழ் வராது. காரணம் இது இந்திய அரசியல் சாசனத்தின் பாதுகாப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்