உருமாறும் கொரோனாவால் தடுப்பூசிகளும் செயலிழக்கும் அபாயம் : உலக சுகாதார நிறுவனம்

உருமாறும் கொரோனாவால் தடுப்பூசிகளும் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது.

Update: 2021-05-11 11:31 GMT
படம்: WHO
புதுடெல்லி

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சம் பெற்று வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி தான் நிரந்த தீர்வு என்று நம்பப்படுகிறது. இதையடுத்து தடுப்பூசி உற்பத்தியை விரைவுபடுத்தி உள்ள மத்திய அரசு, பல்வேறு மாநிலங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தடுப்பூசியை அனுப்பி வருகிறது.

கொரோனா தொற்று பரவலில் இருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசிகள் மட்டுமே வழியாக இருக்கும் சூழலில் உருமாறும் கொரோனாவால் தடுப்பூசிகளும் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக  உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலையில் பரவி வருவது பி1 617 வகை நோய் கிருமி. உருமாறிய இந்த வைரஸின் வீரியம் மற்றும் பரவும் தன்மை முதல் அலையில் பரவிய வைரஸை விட பல மடங்கு அதிகம் என்கிறது உலக சுகாதார நிறுவனம். 

மேலும் அமெரிக்கா, பிரிட்டன் சுகாதாரத்துறையினர் இதுகுறித்து கவலை தெரிவித்துள்ளனர். இரண்டாம் அலை வேகமாக பரவ இதுவும் ஒரு காரணம். இதுமட்டுமல்லாமல் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகளை மக்கள் கைவிட்டதும் முக்கிய காரணம் என்கின்றனர்.

தற்போது இந்தியாவில் கிட்டத்தட்ட 2 சதவீத பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இந்த நிலையில் வைரஸ் மேலும் உருமாற்றம் அடைந்தால் அது மிகவும் அபாயகரமானதாக இருக்கும் என்றும் அதனை தடுப்பூசிகளால் கூட தடுக்க முடியாத சூழல் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறுகிறார் டாக்டர் சவுமியா சாமிநாதன். 

மேலும் செய்திகள்