கேரளாவில் 45 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு
கேரளாவில் 45 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.
திருவனந்தபுரம்,
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நபர்களுக்கு, அதன் தொடர்ச்சியாக கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பும் ஏற்பட்டு வருவது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா சிகிச்சைக்கு ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு இந்நோய் பாதிப்பு ஏற்பட கூடிய சாத்தியம் அதிகமுள்ளது என கூறப்படுகிறது. நாட்டின் பல பகுதிகளில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு காணப்படுகிறது.
இதனை முன்னிட்டு ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழகம், ஒடிசா, குஜராத், பஞ்சாப், அரியானா, கர்நாடகா, பீகார் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் இதனை தொற்று நோய் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட தொற்று நோயாக அறிவித்து உள்ளது.
நாடு முழுவதும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த நோய் பாதிப்பு காணப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தின் அண்டை மாநிலம் கேரளாவில் 45 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உள்ளது என சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைகிறது. உயிரிழப்பு விகிதம் அதே அளவிலேயே உள்ளது. அதிகரிக்கவில்லை. கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு அதிகளவில் பதிவாகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.