மங்களூருவில் ஓடும் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்து தீப்பிடித்தது

மங்களூருவில் ஓடும் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்து தீப்பிடித்தது. இதில் டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
மங்களூருவில் ஓடும் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்து தீப்பிடித்தது
Published on

மங்களூரு:

மர்மபொருள் வெடித்தது

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகர் நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென்று அந்த ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று வெடித்தது. சிறிது நேரத்தில் ஆட்டோவிலும் தீப்பிடித்தது. இதனை பார்த்த அந்தப்பகுதியில் இருந்தவர்கள் விரைந்து வந்து ஆட்டோவில் பிடித்து எரிந்த தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் ஆட்டோ டிரைவரும், ஒரு பயணியும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரும் மீட்கப்பட்டு மங்களூரு வென்லாக் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாலீசார் ஆய்வு

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மூத்த போலீஸ் அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் மர்ம பொருள் வெடித்ததால், அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர். தடயவியல் நிபுணர்கள், ஆட்டோவில் ஆய்வு செய்தனர். அப்போது ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்று எடுக்கப்பட்டது. இதனால் குக்கர் வெடித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனாலும், ஆட்டோவில் வெடிப்பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்ட போது வெடி விபத்து ஏற்பட்டதா அல்லது குக்கர் வடித்ததால் தீப்பிடித்ததா என்பது உறுதியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மக்கள் பயப்பட வேண்டாம்

இதுகுறித்து மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், மங்களூரு நாகுரி பகுதியில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்து தீப்பிடித்துள்ளது. இதுபற்றி யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். ஆட்டோவில் என்ன பொருள் வெடித்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதனால் மக்கள் யாரும் பயப்பட தேவையில்லை என்றார்.

ஆனாலும் அந்தப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.

ஏற்கனவே கடந்த மாதம் (அக்டோபர்) தமிழ்நாடு கோவையில் வெடிபொருட்கள் கொண்டு சென்ற கார் வெடித்து ஜமேஷா முபின் ஒருவர் உயிரிழந்தார். அந்த சம்பவம் அடங்குவதற்குள் தற்போது மங்களூருவில் ஆட்டோவில் மர்மபொருள் வெடித்து தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com