ஆந்திராவில் காதலிக்க மறுத்த இளம்பெண் கழுத்தறுத்து கொலை..! காதலன் வெறிச்செயல்

இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஞானேஸ்வர் தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்தை அறுத்துள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

அமராவதி,

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் பல் மருத்துவப்படிப்பு பயிலும் மாணவி கொலை செய்யப்பட்டார். கொலை செய்த நபர் தற்கொலை செய்துகொள்வதற்காக தனது கையை அறுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், விஜயவாடாவில் மாணவி ஒருவர் பிடிஎஸ் படிப்பில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஊடகம் மூலமாக ஞானேஸ்வர் என்பவருடன் நட்புடன் பழகிவந்தார்.

இவர்களது நட்பு காதலாக மாறிய நிலையில், கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவி, ஞானேஸ்வருடன் பழகுவதை நிறுத்தினார். ஆனால் ஞானேஸ்வர் தொடர்ந்து மாணவிக்கு தொந்தரவு கொடுத்துவந்ததாக கூறப்படுகிறது.

இதனால், சில மாதங்களுக்கு முன்பு ஞானேஸ்வர் மீது விஜயவாடா காவல்துறையில் மாணவி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ஞானேஸ்வரை கவுன்சிலிங் கொடுத்து எச்சரித்து அனுப்பினர்.

பின்னர் குண்டூர் அருகே உள்ள தக்கெல்லப்டு என்ற இடத்தில் தனது தோழியுடன் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மாணவி தங்கியிருந்தார். மாணவி இருக்கும் இடத்தை அறிந்த ஞானேஸ்வர் திங்கள்கிழமை இரவு தக்கெல்லபாடு சென்று அவரிடம் பேச முயன்றார்.

அப்போது இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஞானேஸ்வர், தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்தை அறுத்துள்ளார்.

சம்பவர் அறிந்து உடனடியாக வந்த அக்கம் பக்கத்தினர் பூட்டிய கதவை உடைத்து ஞானேஸ்வரை தாக்க முற்பட்டனர். அப்போது அவர் தனது கையை வெட்டினார்.

அறையில் ரத்த வெள்ளத்தில் துடித்த மாணவி குண்டூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மாணவியை கொலை செய்த ஞானேஸ்வரை கைதுசெய்த போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com