ஆசியாவின் நம்பர் 1 பணக்காரப் பெண் - சாவித்ரி ஜிண்டால்

ஆசியாவின் நம்பர் 1 பணக்காரப் பெண் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் சாவித்ரி ஜிண்டால்.

Update: 2022-07-30 12:44 GMT

மும்பை,

ஆசியாவின் நம்பர் 1 பணக்காரப் பெண் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் சாவித்ரி ஜிண்டால். புளூம்பெர்க் பில்லினர் இண்டக்ஸில் டாப் 10 ஆசிய பணக்காரப் பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். முன்னதாக, இந்த இடத்தில் சீனாவின் யாங் ஹூயான் இருந்தார். அவர் சொத்துப் பிரச்சினையில் சிக்கியதால் அவருடைய முதலிடம் பறிபோனது. இதை தொடர்ந்து சாவித்ரி ஜிண்டால் அந்த இடத்தைப் பிடித்துள்ளார்.

சாவித்ரி ஜிண்டால் உலோகம், மின் துறையில் உள்ள ஜிண்டால் குழுமத்தின் உரிமையாளர், நிறுவனரின் மனைவி என்ற வகையில் சாவித்ரி ஜிண்டாலின் சொத்து மதிப்பு 11.3 பில்லியன் டாலராக உள்ளது. இவரைத் தொடர்ந்து சீனாவின் பேன் ஹாங்வே இரண்டாவது இடத்திலும், யாங் ஹூயன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

கடந்த 2005 ஆம் ஆண்டு யாங் ஹூயன் தனது தந்தையின் சொத்திலிருந்து பெரும் பங்கை பெற்றார். இதனால் ரியல் எஸ்டேட் ஜாம்பவானின் மகளான யாங் ஹூயன் ஆசியாவின் பெரும் பணக்காரப் பெண் மற்றும் மிக இளம் வயதில் பில்லினர் ஆனவர் போன்ற பெருமைகளைப் பெற்றார். தற்போது சாவித்ரி ஜிண்டால் ஆசிய முதல் பெண் பணக்காரர் என்ற பெருமையைப் பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.

72 வயதாகும் ஜிண்டால், அவரது கணவர் ஓ.பி.ஜிண்டால் மறைவுக்குப் பின்னர் ஜிண்டால் குழுமத்தின் தலைவராக இருக்கிறார். ஓ.பி.ஜிண்டால் கடந்த 2005 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்