நஷ்ட ஈடு பத்திரம் வாங்கிவிட்டு காரை உரிமையாளரிடம் ஒப்படைக்கலாம்

மர்ம நபர்கள் காரை திருடி குற்றச்செயலில் ஈடுபட்டதால் கார் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த காருக்காக நஷ்ட ஈடு பத்திரம் பெற்றுக் கொண்டு உரிமையாளரிடம் காரை ஒப்படைக்கலாம் என்று போலீசாருக்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நஷ்ட ஈடு பத்திரம் வாங்கிவிட்டு காரை உரிமையாளரிடம் ஒப்படைக்கலாம்
Published on

பெங்களூரு:

மர்ம நபர்கள் காரை திருடி குற்றச்செயலில் ஈடுபட்டதால் கார் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த காருக்காக நஷ்ட ஈடு பத்திரம் பெற்றுக் கொண்டு உரிமையாளரிடம் காரை ஒப்படைக்கலாம் என்று போலீசாருக்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கொலை, கொள்ளை

கர்நாடகத்தில் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கொலை, கொள்ளை உள்பட பல்வேறு குற்ற சம்பவங்கள் நடக்கின்றன. குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள், தாங்கள் பயன்படுத்திய வாகனங்களை சாலையோரம் அல்லது வேறு எங்காவது நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

அந்த வாகனங்களை போலீசார் மீட்டு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய வளாகம் அருகே நிறுத்தி வைக்கின்றனர்.

கொலை வழக்கில்...

இந்த நிலையில் ராஜாஜி நகரை சேர்ந்தவர் ஜவ்வாஜி தானா. இவரது கார் உள்பட 2 மோட்டார் சைக்கிள்களை திருடிய மர்மநபர்கள், கொலை சம்பவத்தில் ஈடுபட்டனர். இதனால் இவரது வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் அவர் தனது காரை தன்னிடம் ஒப்படைக்க கோரி மாவட்ட கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதனை விசாரித்த மாவட்ட கோர்ட்டு அதற்கு மறுத்துவிட்டது. அதையடுத்து அந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார். அதன் மீதான விசாரணை நீதிபதி நடராஜன் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது அவர் கூறுகையில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்கின்றனர்.

நஷ்டஈடு பத்திரம்

அவர்கள் அவற்றை போலீஸ் நிலையங்கள் முன்பு நிறுத்துவதால், யாருக்கு என்ன பயன். அந்த வாகனங்கள் நாளடைவில் பயனற்ற நிலைக்கு தள்ளப்படுகிறது. குஜராத்தை சேர்ந்த மனுதாரர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், போலீசார் பறிமுதல் செய்த வாகனங்களை மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதை பின்பற்றி போலீசார், பறிமுதல் செய்த காரை விரைவாக உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்காக அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் உத்தரவாதத்துடன் கூடிய நஷ்டஈடு பத்திரம் பெற்று கொண்டு அவரது காரை விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com