

கொள்ளேகால்:-
சாம்ராஜ்நகர் தாலுகாவிற்கு உட்பட்டது ஹெக்கோதாரா கிராமம். இந்த கிராமத்தில் தலித் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரின் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா சர்கூரை சேர்ந்த மணமகளின் குடும்பத்தினர் வந்திருந்தனர். திருமணம் முடிந்து அனைவரும் சாப்பிட்டுவிட்டு, அதே பகுதியில் பிற சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டிக்கு சென்று தண்ணீர் குடித்துள்ளனர். இதை அந்த சமுதாயத்தை சர்ந்த சில இளைஞர்கள் பார்த்து, தண்ணீர் குடித்தவர்களை அங்கிருந்து துரத்தியடித்தனர். மேலும் மாட்டு கோமியத்தை எடுத்து வந்த தண்ணீர் தொட்டியை சுற்றி தெளித்து சுத்தம் செய்தனர். இந்த சம்பவம் ஹெக்கோதாரா கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தாசில்தார் விசாரணைக்கு உத்தரவிட்டாலும், சம்பந்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தலித் இளைஞர்கள் அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட பொறுப்பு மந்திரி சோமண்ணா 'தலித் மக்களை புறக்கணிப்பது கண்டனத்திற்குரியது. சம்பந்தப்பட்டவர்கள் மீது மாவட்ட கலெக்டர் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும். இனி இதுபோன்ற சம்பவங்கள் அந்த பகுதியில் நடைபெறாவாறு பார்த்து கொள்ளவேண்டும். குடிநீரை அனைவரும் பயன்படுத்த சமஉரிமை அளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளார்.