நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து : தெலுங்கானா பாஜக எம்.எல்.ஏ சஸ்பெண்ட்

சர்ச்சைக்குரிய கருத்து குறித்து 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது.
நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து : தெலுங்கானா பாஜக எம்.எல்.ஏ சஸ்பெண்ட்
Published on

ஐதராபாத்,

கோஷாமால் தொகுதியை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங் என்பவர், ஐதராபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மேடை நகைச்சுவை கலைஞர் முனாவர் பரூக்கி என்பவரை விமர்சித்து ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில், நுபுர் சர்மாவை போல் நபிகள் நாயகம் குறித்து ராஜா சிங் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் நபிகள் நாயகம் குறித்து கூறிய சில அவதூறான விஷயங்களை பாஜக எம்எல்ஏ ராஜாசிங் மீண்டும் வலியுறுத்தி பேசியுள்ளார். பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங் பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய ராஜா சிங்கை கைது செய்ய வலியுறுத்தி இஸ்லாமியர்கள் நேற்றிரவு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஐதராபாத் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பாக திரண்ட அவர்கள் முழக்கங்களை எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங் மீது முகமது நபிக்கு எதிராக அவதூறான கருத்து தெரிவித்ததற்காக இன்று காலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.முகமது நபிக்கு எதிராக அவதூறான கருத்து தெரிவித்ததற்காக  அவர் கைது செய்யப்பட்ட நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவும் பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com