மனைவியை கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

மனைவியை கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-11-11 18:45 GMT

சிவமொக்கா: மனைவியை கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெண் கொலை

சிவமொக்கா தாலுகா ஹால் லக்கவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத்(வயது 36). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி இருந்தார்.

இவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ந்தேதி கணவன், மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த மஞ்சுநாத், மனைவி என்றும் பாராமல் அவரை எட்டி உதைத்து அடித்து கொலை செய்துள்ளார்.

இதுபற்றி அறிந்த அப்பகுதியினர், வினோபாநகர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் மஞ்சுநாத்தை கைது செய்தனர். மேலும் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

ஆயுள் தண்டனை

இதுதொடர்பான வழக்கு விசாரணை சிவமொக்கா மாவட்ட முதலாவது கூடுதல் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி கே.எஸ்.மானு தீர்ப்பு கூறினார். அதில், மனைவியை மஞ்சுநாத் கொலை செய்தது நிரூபணமானதால் அவருக்கு ஒரு ஆயுள்தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்