பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதால் விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளது - பிரதமர் மோடி பேச்சு
பெட்ரோலுடன் எத்தனால் கலப்பது கடந்த 8 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்திருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.;
Image courtesy : PTI
காந்திநகர்,
குஜராத்தில் இன்று நடந்த சபர் பால் பண்ணையின் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி அதன் பிறகு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதால் விவசாயிகளின் வருமானமும் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது :
பெட்ரோலுடன் எத்தனால் கலப்பது கடந்த 8 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்திருக்கிறது. 2014ம் ஆண்டுக்கு முன்பு 40 கோடி லிட்டர் கலக்கப்பட்ட நிலையில், இப்போது 400 கோடி லிட்டராக உயர்ந்துள்ளது. பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதால் விவசாயிகளின் வருமானமும் அதிகரித்துள்ளது.
கடந்த 8 ஆண்டுகளில் விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை உயர்த்துவதற்காக தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றின் பலன் இப்போது தெரிகிறது. விவசாயம் தவிர, கால்நடை வளர்ப்பு, மீன்பிடித்தல் மற்றும் தேன் உற்பத்தி போன்ற வணிக நடவடிக்கைகளை ஊக்குவித்ததும் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க செய்துள்ளது.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.