சத்தீஷ்காரில் செல்போன் கோபுரங்கள், 3 வாகனங்களுக்கு தீவைப்பு - மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் அட்டூழியம்

சத்தீஷ்காரில் செல்போன் கோபுரங்கள், 3 வாகனங்களுக்கு மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் தீவைத்தனர்.

Update: 2022-11-21 18:57 GMT

கோப்புப்படம்

கான்கெர்,

மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களில் ஒன்று சத்தீஷ்கார். நேற்று முன்தினம் இரவிலும் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்து அட்டூழியம் செய்துள்ளனர்.

அவர்கள் 4 செல்போன் கோபுரங்கள் மற்றும் சாலை அமைப்பு பணியில் ஈடுபட்ட 3 வாகனங்களை தீவைத்து கொளுத்தி உள்ளனர். கான்கெர் மாவட்டத்தின் அன்டாகார் நகர சுற்றுவட்டாரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த தீவைப்பு சம்பவங்கள் நள்ளிரவில் நடந்து உள்ளன.

மேலும் அந்த பகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை பயங்கரவாதிகள் ஒட்டியுள்ளனர். அவற்றில் தங்களின் மூத்த போராளிகள் 2 பேர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், செவ்வாய்க்கிழமை பந்த் கடைப்பிடிக்க அழைப்புவிடுத்தும் வாசகங்கள் இடம் பெற்று உள்ளன.

தீவைப்பு சம்பவங்களை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்