எதிர்க்கட்சிகள் தாங்களும் எதுவும் செய்ய மாட்டார்கள், செய்பவர்களையும் விட மாட்டார்கள் - பிரதமர் மோடி

எதிர்மறை அரசியலை கடந்து நேர்மறை அரசியலின் பாதையில் பயணித்து வருகிறோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் தாங்களும் எதுவும் செய்ய மாட்டார்கள், செய்பவர்களையும் விட மாட்டார்கள் - பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் 508 ரெயில் நிலையங்களின் சீரமைப்புப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். அம்ரித் பாரத் ரெயில் நிலைய திட்டத்தின் கீழ் ரூ.24 ஆயிரத்து 470 கோடி செலவில் இந்த ரெயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட உள்ளன.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

இந்தியா முழுவதும் 1,300 பெரிய ரெயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளன. அதில் 508 ரெயில் நிலையங்கள் இன்று மேம்படுத்தப்படுகின்றன. இதற்காக சுமார் ரூ.25 ஆயிரம் கோடி செலவு செய்யப்படுகிறது.

சாமானிய மக்களுக்கு ரெயில்வேத்துறை மிகவும் முக்கியமான துறையாக மாறி விட்டது. கடந்த 9 ஆண்டுகளில் ரெயில்வேத் துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு மாநில தலைநகரங்கள் ரெயில்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. சரக்கு கொண்டு செல்லும் நேரமும் குறைக்கப்பட்டு உள்ளது. ரெயில் நிலையங்களின் மேம்பாடு சுற்றுலா பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கும்.

கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் எந்த பணிகளையும் செய்தது கிடையாது. எதிர்க்கட்சியினர் தாங்களும் எதுவும் செய்ய மாட்டார்கள், செய்பவர்களையும் விட மாட்டார்கள்.

நாடாளுமன்ற கட்டிடம், போர் நினைவகம், குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை போன்றவற்றை கட்டியபோது எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. எதிர்மறை அரசியலை கடந்து நேர்மறை அரசியலின் பாதையில் பயணித்து வருகிறோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com