Image Courtacy: ANI
Image Courtacy: ANI

குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தில் சிறுமியை பயன்படுத்துவதா? - பிரதமர் மோடி மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தில் சிறுமியை பயன்படுத்தியதாக பிரதமர் மோடி மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
Published on

புதுடெல்லி,

குஜராத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பிரதமர் மோடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில் பிரதமருக்கு அருகே சிறுமி ஒருவர் நின்று கொண்டு குஜராத்தில் பிரதமர் மோடியின் ஆட்சியை குறித்து விவரிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த வீடியோ பதிவை மத்திய மந்திரிகளும், பா.ஜனதா தலைவர்களும் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். ஆனால் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் தளத்தில், 'தேர்தல் பிரசாரத்துக்காக ஒரு சிறிய குழந்தையை பிரதமர் பயன்படுத்தி இருக்கிறார். இது அப்பட்டமான சட்ட மீறல். தேர்தல் கமிஷன் எங்கே? தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் எங்கே?' என கேள்வி எழுப்பி இருந்தார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரையில் குழந்தைகளை ஈடுபடுத்துவதாக பா.ஜனதா கூறி வந்த நிலையில், காங்கிரசின் இந்த குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெறுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com