அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறி காபிச்செடிகளை வெட்டியதற்கு எதிர்ப்பு: 3 பெண்கள் விஷம் குடித்ததால் பரபரப்பு

சிக்கமகளூரு அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறி காபிச்செடிகளை, வனத்துறையினர் வெட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 பெண்கள் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறி காபிச்செடிகளை வெட்டியதற்கு எதிர்ப்பு: 3 பெண்கள் விஷம் குடித்ததால் பரபரப்பு
Published on

சிக்கமகளுரு;

அரசு நிலம் ஆக்கிரமிப்பு

சிக்கமகளூரு தாலுகா பொகசே கிராமம் அருகே பரமேஸ்வரப்பா மடம் உள்ளது. இந்த பகுதியில் 5 விவசாயிகளின் காபி தோட்டம் உள்ளன.இந்த நிலையில் காபித்தோட்டங்கள், பத்ரா வனவிலங்கு சரணாலயத்திற்குட்பட்ட நிலம் என்றும், அதனை ஆக்கிரமித்து விவசாயம் செய்வதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் நிலத்தை காலி செய்யும்படி வனத்துறையினர், சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் விவசாயிகள், நிலத்தை காலி செய்யவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் 50-க்கும் மேற்பட்ட போலீசாருடன் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் மரம் வெட்டும் எந்திரங்களால் ஊழியர்களை வைத்து ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறப்படும் நிலத்தில் இருந்த காபி செடிகளை வெட்டி அகற்றினர். சுமார் 500-க்கும் மேற்பட்ட காபிச்செடிகளை வெட்டி அகற்றியுள்ளனர்.

விஷம் குடித்தனர்

இதைப்பார்த்த விவசாயிகள், குடும்பத்தினர் கதறி அழுதனர். மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த 3 பெண்கள் திடீரென விஷம் குடித்தனர். அவர்களை, போலீசார் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே விவசாயிகள், வனத்துறையினரிடம் நிலத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையேல் மாற்றுஇடம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதைதொடர்ந்து வனத்துறையினர், நிலத்தை மீட்கும் பணியை தற்காலிகமாக கைவிட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com