சிவமொக்கா ரவுடி கொலை வழக்கில் சிக்கமகளூரு டவுன் போலீசில் 5 பேர் சரண்

சிவமொக்கா ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர், சிக்கமகளூரு டவுன் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களை, போலீசார் கைது செய்தனர்.
சிவமொக்கா ரவுடி கொலை வழக்கில் சிக்கமகளூரு டவுன் போலீசில் 5 பேர் சரண்
Published on

சிக்கமகளூரு;

ரவுடி படுகொலை

சிவமொக்கா டவுனை சேர்ந்தவர் ஹந்தி அண்ணி(வயது 40). ரவுடியான இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடி ஹந்தி அண்ணி, வினோபாநகர் போலீஸ் சவுக் பகுதியில் நடந்து சென்றார்.

அப்போது அங்கு வந்த மர்மநபர்கள், ஹந்தி அண்ணியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை குறித்து வினோபாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடிவந்தனர்.

போலீசில் 5 பேர் சரண்

இந்த நிலையில் நேற்று காலை சிக்கமகளூரு டவுன் போலீஸ் நிலையத்தில் 5 பேர் கொண்ட கும்பல் வந்தனர். பின்னர் அவர்கள், போலீசாரிடம் சிவமொக்கா ரவுடி ஹந்தி அண்ணியை கொன்றது நாங்கள் தான் என்று கூறி சரணடைந்தனர். இதையடுத்து 5 பேரையும், போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள், சிவமொக்காவை சேர்ந்த கார்த்திக், மனு, பஸ்மது, புனித், மது ஆகியோர் என்பதும், இவர்கள் தான் ரவுடி ஹந்தி அண்ணியை கொன்றது உறுதியானது. முன்விரோதத்தில் ஹந்தி அண்ணியை, அவர்கள் கொன்றதும் தெரியவந்தது. மேலும் சிவமொக்கா போலீசாருக்கு பயந்து இங்கு சரணடைந்ததும் தெரியவந்தது.

சிவமொக்கா போலீசாருக்கு தகவல்

இதுபற்றி சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்ஷய் மச்சீந்திரா நிருபர்களுக்கு தெரிவித்ததாவது:-

சிவமொக்கா ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர், சிக்கமகளூரு டவுன் போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். அவர்களை, போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுபற்றி வினோபாநகர் போலீசாருக்கும், சிவமொக்கா போலீஸ் சூப்பிரண்டுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விரைவில் அவர்களை சிவமோகா போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com