

பெங்களூரு: அகில இந்திய அகர்பத்தி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கண்காட்சி நேற்று பெங்களூரு அரண்மனை மைதானத்தில் தொடங்கியது. இந்த கண்காட்சியை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்து பேசியதாவது:-
அகர்பத்தி உற்பத்தியில் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனால் பெண்கள் பயனடைகிறார்கள். சிறிய சமூகங்களான கும்பாரா, கம்மாரா, சம்மாரா போன்ற சமூகங்களுக்கு கடன் உதவி அளிக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. பொருளாதாரம் அடிமட்டத்தில் இருந்து வளர வேண்டும். அகர்பத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் தொழில். எந்த தொழிலும் இது போல் இல்லை. சிறு சந்தோஷங்கள் பெரிய மகிழ்ச்சியை அளிக்கின்றன. அகர்பத்தி தொழிலுக்கு பெரிய வரலாற்று பின்னணி உள்ளது. இது ஒரு பெரிய அறிவியல். இந்தியா வேற்றுமைகளை கொண்ட நாடு.
பெண்களை பொருளாதார பலமிக்கவர்களாக மாற்ற எங்கள் அரசு, பெண்கள் திறன் மேம்பாட்டு திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை நிதி உதவி அளிக்கப்படுகிறது. பெண்கள் அதிகளவில் சேமிப்புகளில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் சுயதொழில் செய்து சம்பாதித்தால் அதிகளவில் சேமிப்பார்கள். பெண்கள் வீட்டில் அமர்ந்தே பணியாற்ற முடியும். இந்த அகர்பத்தி தொழிலுக்கு அரசு உதவி அளிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.