பாலியல் பலாத்கார குற்றவாளிகள் அனைவரும் இனி மன்னிப்பு கேட்டு விண்ணப்பிப்பார்கள்- பில்கிஸ் பானு வழக்கறிஞர்

பில்கிஸ் பானு வழக்கறிஞர் ஷோபா குப்தா குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை விமர்சனம் செய்துள்ளார்.
Image Courtesy: PTI 
Image Courtesy: PTI 
Published on

காந்திநகர்,

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்துக்கு பின், பில்கிஸ் பானு என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

பில்கிஸ் பானு 20 வயது கர்ப்பிணியாக இருந்தபோது, 11 குற்றவாளிகளால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது மூன்று வயது மகள் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் கலவரக்காரர்களால் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் குற்றவாளிகளாக 11 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு மும்பை ஐகோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது. சமீபத்தில் குற்றவாளிகள் 15 வருடங்கள் சிறையில் கழித்த பின், அதில் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் முன்னதாக விடுதலை செய்யப்பட வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். அதன்பின் சுப்ரீம் கோர்ட்டு இது குறித்து கருத்தில் கொள்ளுமாறு குஜராத் அரசை கேட்டுக் கொண்டது.

பின் குஜராத் அரசு கமிட்டி ஒன்றை உருவாக்கியது. அந்த கமிட்டி குற்றவாளிகளை விடுவிக்க பரிந்துரைத்தது. பின்னர் கடந்த 14 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவர்களை கருணை அடிப்படையில் குஜராத் அரசு சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பில்கிஸ் பானு வழக்கறிஞர் ஷோபா குப்தா குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், " ஒவ்வொரு பாலியல் பலாத்கார மற்றும் கொலை குற்றவாளிகளும் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கருணை அடிப்படையில் விடுதலைக்கு விண்ணப்பிப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்.

இந்த வழக்கில் விடுதலை வழங்கப்படுமானால், ஒவ்வொரு குற்றவாளியும் ஏன் மன்னிப்பு கேட்க மாட்டார்கள்?" என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com