

தஞ்சாவூரிலிருந்து நேற்று காலை தனியார் பஸ் ஒன்று புறப்பட்டு கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சின் பின்னால், மற்றொரு தனியார் பஸ் சென்றது. சுவாமிமலையை அடுத்த சுந்தரபெருமாள்கோவில் பஸ் நிறுத்தத்தில் முதலில் சென்ற தனியார் பஸ் பயணிகளை ஏற்றுவதற்காக நின்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் நின்ற பஸ்சின் பின்புறம் மோதியது.
20 பயணிகள் காயம்
இதில், 2 பஸ்களிலும் பயணம் செய்த 20 பேர் காயமடைந்தனர். அவர்களை சகபயணிகள் மற்றும் அங்குள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முன்னால் சென்ற பஸ்சின் டிரைவர் மணிகண்டன் சுவாமிமலை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.