ராமநாதபுரம், புதுக்கோட்டை மீனவர்கள் 22 பேர் விடுவிப்பு

யாழ்ப்பாணம் சிறையில் தவித்த ராமநாதபுரம், புதுக்கோட்டை மீனவர்கள் 22 பேர் விடுவிக்கப்பட்டனர். ஆனால், 4 விசைப்படகுகளை அரசுடைமையாக்கி இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம், புதுக்கோட்டை மீனவர்கள் 22 பேர் விடுவிப்பு
Published on

ராமேசுவரம், 

யாழ்ப்பாணம் சிறையில் தவித்த ராமநாதபுரம், புதுக்கோட்டை மீனவர்கள் 22 பேர் விடுவிக்கப்பட்டனர். ஆனால், 4 விசைப்படகுகளை அரசுடைமையாக்கி இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு துறைமுக பகுதியில் இருந்து கடந்த 21-ந் தேதி 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2000-க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

தங்கச்சிமடம் அந்தோணியார் பிரசாத் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு ஒன்றில் சந்தியா(வயது 32), ஜிப்ரான் (18), நாகசாமி (50), நடராஜன் (48), தேவராஜ் (40) ஆகிய 5 மீனவர்கள் சென்றிருந்தனர். இந்த 5 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். படகையும் பறிமுதல் செய்தனர்.

இதே போல் அதே நாளில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றிருந்த 17 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து, அந்த 17 பேரையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

22 மீனவர்கள் விடுவிப்பு

யாழ்ப்பாணம் சிறையில் தவித்த மேற்கண்ட 22 மீனவர்களும் நேற்று ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நீதிபதி கஜநிதிபாலன் அவர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர், 22 மீனவர்களையும் நிபந்தனையுடன் விடுவித்து உத்தரவிட்டார். அதாவது, இனி இலங்கை கடல் பகுதிக்குள் இந்த மீனவர்கள் மீன்பிடிக்க வரக்கூடாது. மீறி வந்தால் அவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும், அவர்களது படகுகளை இலங்கை அரசுடைமையாக்கியும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

விடுவிக்கப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். விரைவில் விமானம் மூலம் 22 மீனவர்களும் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீனவர்கள் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும், அவர்களின் வாழ்வாதாரமான படகுகள் இலங்கை அரசுடைமையாக்கியது மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com