ரூ.1 கோடி நிலமோசடி வழக்கில் 3 பேர் கைது

மேச்சேரி அருகே ரூ.1 கோடி நில மோசடி வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
ரூ.1 கோடி நிலமோசடி வழக்கில் 3 பேர் கைது
Published on

மேச்சேரி

ஓய்வுபெற்ற ஊழியர்

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே வெள்ளார் ஊராட்சி எருமைப்பட்டி காட்டுவளவை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 61), ஓய்வுபெற்ற மின்சார வாரிய ஊழியர். இவர் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு கட்டுமான பணி செய்து வந்துள்ளார். தொழில் செய்ய பணம் தேவைப்படுவதால் கடன் வாங்க முயற்சி செய்து வந்தார்.

இதை அறிந்த எடப்பாடி பணிக்கனூரை சேர்ந்த தனபால், கொங்கணாபுரத்தை சேர்ந்த பச்சியண்ணன்ஆகிய 2 பேரும் வாசுதேவனிடம் ஒரு ரூபாய் வட்டியில் ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாகவும் அதற்கு3 சதவீதம் தங்களுக்கு கமிஷன் கொடுத்தால் போதும் எனவும் கடனுக்கு உங்களுடைய 4 ஏக்கர் விவசாய நிலத்தை கிரையம் செய்து கொடுக்க வேண்டும் எனக்கூறி பேசி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

அதன்பிறகு சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த சசிகுமார் வாசுதேவனுடைய வங்கி கணக்குக்கு ரூ.21 லட்சத்து 77 ஆயிரம் வங்கி மூலம் அனுப்பி வைத்துவிட்டு மீதி தொகையை கிரயம் செய்த பிறகு தருவதாக கூறியுள்ளார். இந்த நிலையில் வாசுதேவன் நிலத்திற்குரிய ஆவணங்களுடன் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று சசிகுமார் பெயரில் கிரையம் செய்து கொடுத்து விட்டார்.

விற்பனை உடன்படிக்கை

அதன்பிறகு சசிகுமாரிடம் பணம் கேட்டதற்கு மீதம் ரூ.77 லட்சத்து 23 ஆயிரம் பணத்தை அசல் ஆவணம் வந்த பின்பு தருவதாக கூறிவிட்டு சென்று விட்டனர். அசல் ஆவணம் அவர்களுக்கு வந்த பின்பு அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதன்பின்பு சசிகுமார், கொங்கணாபுரத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்கு அதே நிலத்தை கிரைய ஒப்பந்தம் செய்து கொடுத்து விட்டார். இதன் பின்பு மேலும் இரண்டு பேருக்கும் அந்த நிலத்தை விற்க உடன்படிக்கை ஒப்பந்தம் செய்து கொடுத்து பணம் வாங்கி சசிகுமார் தரப்பினர் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

அதன்பிறகு கடைசியாக மேச்சேரி கொப்பம்புதூரை சேர்ந்த சசிகுமார், காளி பட்டியை சேர்ந்த ரவி, பொட்டனேரியை சேர்ந்த சேகர் ஆகிய 3 பேருக்கு அதே நிலத்தை கன்னங்குறிச்சி சசிகுமார் கிரையம் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது நிலத்திற்கு ரூ.77 லட்சம் பணத்தை தராமல் மோசடி செயலில் ஈடுபட்ட கன்னங்குறிச்சி சசிகுமார் உள்பட 14 பேர் மீது வாசுதேவன் மேச்சேரி போலீசில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கடைசியாக அந்த நிலத்தை வாங்கிய, கொப்பம்புதூரை சேர்ந்த சசிகுமார், ரவி, சேகர் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களில் கன்னங்குறிச்சி சசிகுமார் வேறொரு நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com