கோவையில் செஸ் போர்டு போன்று பஸ் நிறுத்தம் அலங்கரிப்பு
கோவையில் செஸ் போர்டு போன்று பஸ் நிறுத்தம் அலங்கரிப்பு;
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்கள் இடையே பிரபலபடுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி கோவை மாநகராட்சி பகுதியில் பொதுமக்களை கவரும் வகையில் 10 பஸ் நிறுத்தங்களை தேர்வு செய்து அதனை செஸ் போர்டு போன்று அலங்கரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதன் முதற்கட்டமாக கோவை லட்சுமி மில் பஸ் நிறுத்தம் செஸ் போர்டில் உள்ளது போன்ற கருப்பு, வெள்ளை கட்டங்கள் போல் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இது காண்போரை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் ஏராளமானோர் இந்த பஸ் நிறுத்தம் முன் நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர். இதேபோல கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை கலெக்டர் சமீரன் திறந்து வைத்து செல்பி எடுத்து கொண்டார்.