மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி

மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி
Published on

சேலம் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று நடைபெற்றது.

பறவைகள் கணக்கெடுப்பு

தமிழ்நாடு வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு கடந்த ஜனவரி மாதம் ஈர நிலப்பரப்பில் வாழும் பறவைகள் குறித்து கணகெடுக்கப்பட்டது. தொடர்ந்து நிலப்பரப்பில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணி சில மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் தெற்கு, வடக்கு, டேனீஸ்பேட்டை, மேட்டூர், ஏற்காடு, வாழப்பாடி ஆகிய வனச்சரகங்களில் நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று நடந்தது. இதற்காக மொத்தம் 25 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் வன ஊழியர்கள், இயற்கை ஆர்வர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 15 பேர் ஈடுபட்டனர்.

காப்புக்காடு

சேர்வராயன் தெற்கு வனச்சரகம் குரும்பப்பட்டி காப்புக்காடு, டேனீஸ்பேட்டை அருகே பண்ணிக்கரடு, செட்டிச்சாவடி பகுதியில் விநாயகம்பட்டி ஆகிய இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது.

கண்களில் தென்படுகிற அனைத்து பறவைகளையும் புகைப்படம் எடுப்பதுடன் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது. கணக்கெடுப்பு பணி முடிவடைந்தவுடன் அந்த குழுவினர் எத்தனை பறவைகள் உள்ளன என்பது குறித்தும், அரிய வகை பறவைகள் குறித்தும் வனத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பார்கள் என்று பறவைகள் கணக்கெடுப்பு குழுவினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com