

தக்கலை:
தக்கலை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
தொலையாவட்டம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவருடைய மகன் நிதின் (வயது 18). இவருடைய நண்பர் ஷிபு (19) கருங்கல் அருகே உள்ள பூட்டேற்றி பகுதியை சேர்ந்த முருகன் மகன் ஆவார். இவர்கள் இருவரும் தொலையாவட்டம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி கம்ப்யூட்டர் சைன்ஸ் 2-ம்ஆண்டு ஒரே வகுப்பில் படித்து வருகிறார்கள்.
இதனால் நண்பர்களான இருவரும் நேற்று மாலை 5 மணி அளவில் தொலையாவட்டத்தில் இருந்து அழகிய மண்டபத்தில் உள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை நிதின் ஓட்டினார். வெள்ளியோடு பகுதியில் வரும்போது எதிரே இன்னொரு மோட்டார் சைக்கிள் வந்தது. இரு மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன. இதில் நிதின், ஷிபு ஆகியோர் தூக்கி வீசப்பட்ட படுகாயம் அடைந்தனர். உடனே இன்னொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர், அதை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.
மாணவர் பலி
உடனே அங்கு இருந்த பொதுமக்கள் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நிதினை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.
அதைத்தொடர்ந்து ஷிபு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்,
இந்த விபத்து குறித்து அறிந்ததும் தக்கலை போலீசார் குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று நிதினின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடியவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.