சிதம்பரம் அருகேவரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் பெண் தற்கொலைகணவர், மாமியார் மீது வழக்கு

சிதம்பரம் அருகே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கணவர், மாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-08-08 18:45 GMT

பரங்கிப்பேட்டை, 

வரதட்சணை கொடுமை

சிதம்பரம் அடுத்த கிள்ளை முடசல் ஓடை மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் நித்யஸ்ரீ (வயது 24). இவருக்கும் மயிலாடுதுறை மாவட்டம் பழையார் புதுநகரை சேர்ந்த நாகேஸ்வரன் மகன் நரேந்திரன் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இதையடுத்து 2 மாதங்களில் நரேந்திரன் சிங்கப்பூருக்கு வேலைக்காக சென்றுவிட்டார். நித்யஸ்ரீ தனது மாமியாருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் மாமியார் ரேவதி, நித்யஸ்ரீயிடம் மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து நித்யஸ்ரீ தனது மாமியாரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.

இதனை அறிந்த நரேந்திரன் செல்போன் மூலம் தனது மனைவியை தொடர்பு கொண்டு திட்டியதாக கூறப்படுகிறது.

விஷம் குடித்து தற்கொலை

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த நித்யஸ்ரீ தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நித்யஸ்ரீயை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நித்யஸ்ரீ  இறந்து போனார்.

சப்-கலெக்டர் விசாரணை

இதுகுறித்து அவருடைய தாய் சத்யா கொடுத்த புகாரின் பேரில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக நரேந்திரன், அவரது தாய் ரேவதி ஆகியோர் மீது கிள்ளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தற்கொலை செய்து கொண்ட நித்யஸ்ரீக்கு திருமணமாகி ஓராண்டே ஆவதால் சிதம்பரம் சப்-கலெக்டர் சுவேதா சுமன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்