ரூ.74 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

ரூ.74 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-01-08 21:03 GMT

செம்பட்டு:

சோதனை

திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானத்தில் செல்பவர்கள் அதிக அளவில் வெளிநாட்டு பணத்தை கடத்தி செல்கின்றனர். இதனை தடுக்கும் வகையில் திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மதியம் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

வெளிநாட்டு பணம் பறிமுதல்

அப்போது ஆண் பயணி ஒருவர் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் தனது பையில் 80 ஆயிரம் அமெரிக்க டாலர் மற்றும் 10 ஆயிரம் யூரோ நோட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து, அந்த நபரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணத்தின் இந்திய மதிப்பு ரூ.74 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்