

நெல்லையை சேர்ந்த சங்கர சுப்பிரமணியம் என்பவர் நெல்லை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், 'நெல்லை டவுன் மேல ரதவீதி சந்திபிள்ளையார் கோவில் பகுதியிலும், தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை மாவட்டங்களிலும் பல்வேறு பெயர்களில் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் நடத்திய தனியார் நிறுவனத்தில், தவணை முறையில் பணம் செலுத்தினால் நிலம் தருவதாக கூறியும், பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறியும் பலரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு நிலத்தை கொடுக்காமல் சிலர் ஏமாற்றி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், நெல்லை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் சாவியோ வழக்குப்பதிவு செய்து, ஜெயபாஸ்கர், கீதா, ஜேக்கப் சுப்புராம் ஆகிய 3 பேரை கைது செய்தார். இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இந்த நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள் தங்களது அசல் ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நெல்லை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு நேரில் வந்து புகார் கொடுக்கலாம் என்று இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் சாவியோ தெரிவித்துள்ளார்.