

கன்னியாகுமரி,
சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்து விட்டு திரும்புவார்கள். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக குமரி மாவட்டம் முழுவதும் சூறைக்காற்றுடன் மழை செய்து வருகிறது. இதனால், சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக உள்ளது. குறிப்பாக வட இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்படுகிறது. இதனால், கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் கடைகளிலும் வியாபாரம் இன்றி காணப்பட்டது.
அதேபோல் கன்னியாகுமரி பகுதியில் கடந்த மூன்று நாட்களாக சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்து வரும் நிலையில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. நேற்று காலை முதல் மாலை வரை கடல் ஆக்ரோஷமாக இருந்தது.
இதனால் ராட்சத சத்தத்துடன் எழுந்த கடல் அலைகள் பாறைகளில் மோதியது. கடல் சீற்றம் காரணமாக முக்கடல் சங்கம் பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது.