குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மேலூர் மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மேலூர் மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2022-11-11 20:01 GMT

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மேலூர் மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

குத்துச்சண்டை போட்டிகள்

உலக அளவிலான குத்துச்சண்டை அசோசியேசன் சார்பில் குத்துச்சண்டை போட்டிகள் கடந்த 2-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை டெல்லி டல்கடோரா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த 47 பேர் கலந்துகொண்டனர். இதில் தமிழக அளவில் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டு 26 பேர் தங்கம் வென்றனர்.

இவர்களில் அரசு பள்ளிகளில் படித்த மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளரிப்பட்டியை சேர்ந்த விவசாயி ராஜபாண்டியின் மகள் வர்ஷினி (வயது 20) என்ற மாணவி ஜோர்டான் நாட்டு வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றார்.

மேலூரில் உள்ள வெள்ளநாதன்பட்டியை சேர்ந்த ஆபிரகாம் என்பவரது மகள் ஷீபாகெட்சியால் தென்கொரிய நாட்டு வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றார். வெற்றி பெற்ற இருவரும் சொந்த ஊர் திரும்பினார்கள். அவர்களுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

உற்சாக வரவேற்பு

சொந்த ஊர் திரும்பிய வர்ஷினிக்கு மேலூர் நான்கு வழி சாலையில் கத்தப்பட்டி சுங்க சாவடியில் இருந்து மாலைகள், சால்வைகள் அணிவித்து மேள, தாளங்களுடன், பட்டாசுகள் வெடித்து ஊர்வலமாக வெள்ளரிப்பட்டி கிராம மக்கள் உற்சாகமாக அழைத்து வந்தனர்.. வெள்ளரிப்பட்டியில் அவர் படித்த அரசு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியை சந்திரா, ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் வர்ஷினியை வாழ்த்தினர். தற்போது வர்ஷினி மதுரை மீனாட்சி கல்லூரியில் இளங்கலை 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

மற்றொரு வீராங்கனையான ஷீபாகெட்சியால் மேலூர் வந்த போது பொதுமக்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் மதுரை லேடிடோக் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்