

சின்னாளப்பட்டி நெசவாளர் காலனியில் ராஜகணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டது. இந்தநிலையில் நேற்று பக்தர்கள் சாமி கும்பிட கோவிலுக்கு வந்தனர். அப்போது, கோவிலுக்குள் பாம்பு இருந்ததை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அலறியடித்து பக்தர்கள் ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து ஆத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தேடி பார்த்தனர். அப்போது கோவிலில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் பாம்பு பதுங்கி இருந்தது. இதையடுத்து அந்த பாம்பை தீயணைப்பு படையினர் உயிருடன் பிடித்தனர். அது, நல்ல பாம்பு ஆகும். அதனை, அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர். கோவிலுக்குள் பாம்பு புகுந்த சம்பவம் சின்னாளப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.