அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின் போது பெண் பலி

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின் போது பெண் பலியானார். அதனை கண்டித்து பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-11 18:45 GMT

மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள தோக்கவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயமோகன். இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி செவ்வந்தி (வயது 26). இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளாள்.

இந்த நிலையில் செவ்வந்தி 2-வதாக கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. அவரை செங்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இதனை தொடர்ந்து செவ்வந்தியை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு நேற்று முன்தினம் மதியம் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. அப்போது செவ்வந்திக்கு ரத்தப்போக்கு அதிகமாக ஏற்பட்டது.

மீண்டும் அறுவை சிகிச்சை

இதனையடுத்து அவரது கர்ப்ப பையை நீக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறினர்.

இதையடுத்து செவ்வந்தியின் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னரும் அவரது உடல்நிலை ஆபத்தான நிலையிலேயே இருந்தது.

இந்த நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதனால் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சாலை மறியல்

பின்னர் இதனை கண்டித்து அவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை முன்பு வேலூர் புறநகர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை போலீசார் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது செவ்வந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டதும் வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்கிறோம் என தெரிவித்தோம், ஆனால் அவர்கள் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து விடலாம் என கூறினர். அறுவை சிகிச்சை செய்தும் செவ்வந்தி இறந்து விட்டார். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்ந்து அவர்களிடம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அரவிந்த் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சமரசம் அடைந்த அவர்கள் கலைந்து சென்றனர். 

2 மாதத்தில் 3 பெண்கள் பலி

பிரசவத்தின்போது பெண்கள் இறப்பது நடந்து கொண்டுதான் உள்ளது. அதுவும் அரசு மருத்துவமனையில் இதுபோன்ற சோகங்கள் நிகழ்கின்றன. இதில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மட்டும் கடந்த 2 மாதத்தில் பிரசவத்தின்போது இப்போது நடந்ததையும் சேர்த்து 3 பெண்கள் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்